கோவில்பட்டியில் மாணவரை உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதாக கூறப்படும் விவகாரம்: துணை போலீஸ் சூப்பிரண்டிடம் ஆசிரியர்கள் பதில் மனு

பொறுப்பு தலைமை ஆசிரியர் அ.முத்துக்குமார்
கோவில்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 18 பேரின் மாத சம்பளத்தில் வருமானவரிக்காக பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை செலுத்தாமல் வங்கியில் வரவு வைத்ததாக போலியான ரசீது கொடுத்து ஏமாற்றியதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் மீது பாதிக்கப்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், நானும் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன், இதற்கு மோசடிக்கு பள்ளி உதவியாளர் தங்க மாரியப்பன் தான் காரணம் என்று புகார் அளித்தார். இந்த விவகாரம் தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் சென்று விளக்கம் அளித்தனர் ஜான் கணேஷ் சார்பில் அவரது மனைவி ஆஜர் ஆனார். கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நான் வந்தேன், அடுத்தகட்ட விசாரணைக்கு அவர் வருவார் என்று உறுதி அளித்தார்.
இதற்கிடையே நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தொடர்ந்து விடுமுறையில் இருப்பதால், அவரது ஒப்புதல் இல்லாததால் சம்பளம் வரவில்லை. இதன் காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆகஸ்டு மாதம் முதல் ஊதியம் பெற்று வழங்கும் வகைக்காக மட்டும் பொறுப்பு தலைமை ஆசிரியராக மூத்த உடற்கல்வி இயக்குனர் அ.முத்துக்குமார் நியமனம் செய்யப்படுகிறார் என்று மாவட்ட கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் ராஜன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு வெள்ளிக்கிழமை(12-ந்தேதி) வெளியானது.
இந்த நிலையில் பள்ளிக்கூட விடுதியில் தங்கி 9- வது வகுப்பு படிக்கும் இடைச்செவல் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் முத்துக்குமார் (தற்போது பொறுப்பு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்) தாக்கியதாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது , பள்ளிக்கு சொந்தமான கால்பந்தை எடுத்து ஏன் விளையாடினாய் என்று கூறி மாணவரை தாக்கியதாகவும் இதில் தனது காது கேட்கவில்லை என்றும் புகார் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் மாணவரை தாக்கியதாக கூறப்படும் உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக பொதுநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே உடற்கல்வி ஆசிரியர் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அவருடன் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் உடற்கல்வி ஆசிரியருக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. அந்த புகார் பொய்யானது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை சூப்பிரண்டு வெங்கடேஷ் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பங்கேற்ற பள்ளியின் ஆய்வக உதவியாளர் கண்ணன, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தலைமை ஆசிரியர் விடுப்பில் இருப்பதால் இந்த மாதம் சம்பளம் வரவில்லை. இதுபற்றி நாங்கள் கல்வி அதிகாரியிடம் முறையிட்டோம். அதன் அடிப்படையில் பொறுப்பு தலைமை ஆசிரியராக அ.முத்துக்குமார் என்பவரை மாவட்ட கல்வி அதிகாரி நியமித்து இருக்கிறார்.
அவர் தலைமை ஆசிரியர் பொறுப்பு ஏற்றால் ஏற்கனவே உள்ள தவறுகள் வெளியே தெரிந்து விடும் என்பதற்காக திட்டமிட்டு அ.முத்துக்குமார் ஒரு மாணவரை தாக்கியதாக பொய்யான குற்றச்சாட்டை சொல்ல வைத்து இருக்கிறார்கள்.
இது பற்றி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் விளக்கி கூறி இருக்கிறோம். மேலும் பொய்யான புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு கண்ணன் கூறினார்.
மாணவர் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், புகாருக்கு உள்ளான ஆசிரியரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
