கோவில்பட்டி மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் கோவில் கொடி மரம் பிரதிஷ்டை விழா 16 ம் தேதி நடக்கிறது

கோவில்பட்டி மெயின் ரோட்டில் காமராஜர் சிலைக்கு எதிர்புறம் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் மீனாட்சி அம்மன் -சுந்தரேஸ்வரர் கோவில் நிர்மாண பணிகள் நடைபெற்று வருகின்றன..
இந்த நிலையில் கோவிலில் நூதன கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. வருகிற 16-ம் தேதி திங்கட்கிழமை காலை 9. 15 மணிக்கு க்கு மேல் 10. 15 மணிக்குள் கொடிமரம் பிரதிஷ்டை விழா நடக்கிறது.
கொடிமர பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள், கொடிமரத்தின் கீழ் தங்கம், கலப்படமில்லாத வெள்ளி பொருட்களை தங்கள் வேண்டுதல் படி வைக்கலாம். நவரத்தின கற்களை தவிர்க்கும் படி விழா குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
.கோவில் கொடிமரம் ஒரே மரத்தால் செய்யப்படுகிறது. புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி தாமிரம் மற்றும் தங்க தகடுகளால் மறைக்கப்பட்டு மேலே மூன்று அடுக்குகளால் அமைக்கப்படுகிறது.
கொடி மரத்தின் அடிப்பகுதி அகலமாகவும் சதுரமாகவும் இருக்கும். பிரம்மா,விஷ்ணு,சிவபெருமான் இவர்களின் தொழில்களை உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக கொடிமரம் திகழ்கிறது.
ராஜகோபுரத்தை விட கொடி மரம் உயரம் குறைவாக இருக்கும்.அதே நேரத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் காணப்படும்..
கொடிமரத்தில் மேலே உள்ள உலோக தகடுகள் இடி மின்னல் தாக்குதலில் இருந்து ஆலயத்தை பாதுகாக்கும். ஒரு ஆலயத்தை முழுமை அடைய செய்வது கொடிமரம் தான். கடவுளை காண முடியாவிட்டாலும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் கொடி மரத்தை வணங்குவது அவசியம்.
கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும்,பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடிமரத்தை வணங்கினால் இறைவனை வணங்கியதற்கு சமமாகும்.
