தூத்துக்குடியில் ரூ.77.80 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2735 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கி தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 723 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.73 கோடி வங்கிக் கடன் இணைப்புகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.77.32 இலட்சம் கடன் உதவிகள் உள்பட மொத்தம் 881 பயனாளிகளுக்கு ரூ.77.80 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசுகையில் கூறியதாவது:_
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் பெறுதல் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் அரசின் மூலமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக எய்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25 ஆம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக்கடன் இலக்கு ரூ.948 கோடி என நிர்ணயிக்கப்பட்டு நாளது தேதி வரை ரூ.417 கோடி எய்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள 458 கோடி ரூபாய் இலக்கினை வருகின்ற மாதங்களில் எய்தப்படும். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு 2023-24-ல் மொத்தம் 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் என்று ஒரு இலக்காக வைத்துள்ளார்கள். இந்த ஆண்டு 35 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் என்ற இலக்கு வைத்துள்ளார்கள். இவ்வாறு ஆண்டுக்கு 5000 கோடி உயர்த்துவதன் மூலம் அதிகளவிலான மகளிர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு கீதா ஜீவன் பேசினார்.
.
இந்நிகழ்ச்சியில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், ஸ்ரீ வைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி. அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
