அமெரிக்காவில் ஒரே நாளில் 3 நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.850 கோடி முதலீடு; மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்: கையெழுத்து

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முதலில் சான்பிரான்சிஸ்கோ நகரில் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பல்வேறு நிறுவனங்கள் தமிழ் நாட்டில் தொழில் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்துவதற்கும் முதலீடுகள் செய்தன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சான்பிரான்சிஸ்கோவில் 5 நாட்கள் தங்கி இருந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பினனர் சிகாகோசென்றார், அங்கும் முதலீட்டாளர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் புதிதாக 5ந்தேதி அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அதே நாளில் முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் முன்னிலையில் விஷய் பிரிஷிஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 100 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் (Sensors and Transducers) உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது
இதே போல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் விஸ்டியன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 250 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது
இந்த நிகழ்வின்போது, தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் .டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் .வே.விஷ்ணு, லிங்கன் எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவபாதசுந்தரம் காஜா, முதுநிலை துணைத் தலைவர் கிரெக் டோரியா விஷய் பிரிஷிஷன் நிறுவனத்தின் முதுநிலை விற்பனை மேலாளர் ஷிர்வர் ஸ்டீபன் விஸ்டியன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சச்சின் லாவண்டே, துணைத் தலைவர் திரு. பிரான்சிஸ் கிம், இயக்குநர் ரியான் கசாரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
