ரூ.50.65 கோடி போதைபொருள் கடத்தல்:தூத்துக்குடி பிரமுகர் உள்பட 6 பேர் கைது

செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வாகன சோதனையின் போது ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர்,
காரின் பின்பக்க இருக்கையை அகற்றி பார்த்தபோது ரகசிய பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் 10 பொட்டலங்களில் `மெத்த பெட்டமின்’ என்ற போதைப் பொருள் இருந்தது, இதன் மொத்த எடை 10.13 கிலோ இதன் மதிப்பு ரூ.50.65 கோடி. இதையடுத்து காரில் இருந்த 3பேரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதாவது 3 பேரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் என்பவரின் அறிவுரைப்படி செயல்பட்டு வந்ததாக குறிப்பிட்டார்கள். இதையடுத்து தொழிலதிபர் விஜய் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரித்த போது, அவர் இன்னொருவரை நோக்கி கைநீட்டினார். அதாவது தூத்துக்குடியைச் சேர்ந்த ரெனால்டு வில்லவராயர் என்பவரிடம் இருந்து இந்தப் போதைப் பொருளை பெற்றதாக கூறியதை தொடர்ந்து .ரெனால்டு வில்லவராயரை கைது செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினார்கள்.
\எழும்பூரில் உள்ள ஒரு விடுதியில் ரெனால்டு வில்லவராயர் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று கைது செய்தனர். அவர் தூத்துக்குடியில் மீனவர் சங்க நிர்வாகியாகவும், கப்பல் நிறுவன உரிமையாளருமாக உள்ளார்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் கைது செய்யப் பட்டார். அந்த வகையில் மொத் தம் 6 பேர் சிக்கியுள்ளார்கள். அவர்களிடம் இருந்து ரூ.1.30 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 6 பேரும் துபாயில் உள்ள முக்கிய நபரின் கட்டளைப்படி செயல்பட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
அந்த நபர் தான் போதைப்பொருட்கள் வேண்டும் என ரெனால்டு வில்லவராயருக்கு கட்டளை பிறப்பிப்பாராம். பின்னர் ரெனால்டு வில்லவராயர் மற்றவர்களின் உதவியுடன் மியான்மர் நாட்டில் இருந்து மெத்த பெட்டமின் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி வந்து அதை சென்னை வழியாக தென் மாவட்டங்களுக்கு கொண்டு சென்று பின்னர் படகுமூலம் இலங்கைக்கு கடத்தி அங்கிருந்து பிற நாடுகளுக்கும் போதைப் பொருட்களை அனுப்பி வந்திருப்பது தெரியவந்துள்ளது.
மெத்த பெட்டமின் அதிக போதை கொண்டது. மிகச்சிறிய அளவே நுகர்ந்தால் போதும் போதையில் மிதப்பார்கள். அதனால் இதற்கு அதிக விலை உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சாதிக் பாட்சாவும் இந்த மெத்த பெட்டமின் போதைப்பொருளையும், அதை தயாரிக்கக்கூடிய மூலப் பொருட்களையும் கடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
