• June 7, 2025

அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்  

 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில்  காலை உணவு திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்  

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 15-9-2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் இத்திட்டம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று  பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கி வைத்தார்.



முன்னதாக புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த உணவின் தரத்தை பரிசோதித்த அவர், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். அருகில் அமர்ந்திருந்த சிறுமிகளுக்கு காலை உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் பேசியபடி தானும் உணவருந்தினார். இத்திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.

முன்னதாக இந்த திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:-
முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் மாணவர்கள், உள்ளிட்டோரின் முன்னேற்றத்திற்காக, எதிர்காலத்திற்காக முதலமைச்சராக இருந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிக மிக மகிழ்ச்சியாக உங்கள் முன் நிற்கிறேன். காலை உணவு திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது.

மக்கள் நலத்திட்டங்களை பார்த்து பார்த்து அரசு செயல்படுத்தி வருகிறது.பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியை போக்கும் திட்டம்தான் காலை உணவுத்திட்டம். அரசுக்கு நிதி நெருக்கடி இருந்த போதிலும் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தோம்.இத்திட்டத்தின் மூலம் 20.73 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள்.
அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு மாணவர் கூட பள்ளிக்கு பசியோடு செல்லக் கூடாது. சங்க இலக்கியத்தில் பசிப் பிணி போக்குவது குறித்து பல்வேறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள்தான் எதிர்காலத்தின் சொத்து என்பதால் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.. மாணவர்களின் படிப்புக்கு எந்த தடையும் ஏற்படக் கூடாது என்பதே எனது எண்ணம். காலை உணவு திட்டம் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது. பள்ளிகளுக்கு வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோரை கேட்டுக் கொள்ள விரும்புவது எந்த பள்ளியிலும் வழங்கப்படும் உணவின் விகிதம், தரம் குறைய கூடாது. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *