காதல்ஜோடிக்கு திருமணம்: கம்யூனிஸ்டு அலுவலகத்தை சூறையாடிய சம்பவத்தில் 13 பேர் கைது

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி.
திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் ஒரு காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (வயது 28), பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி ( 23) இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் லெனின் சிலை முன்பு போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தாட்சாயினியை காணவில்லை என்று அவரது வீட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தாட்சாயினி திருமணம் செய்து கொண்டதை அறிந்த அவரது உறவினர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு ரகளையில் ஈடுபட்டனர்,.கட்சி அலுவலக கண்ணாடிகளையும், நாற்காலிகளையும் உடைத்ததுடன், கட்சி நிர்வாகிகளையும் தாக்கினர். பாதுகாப்புக்கு இருந்த போலீசார் தடுத்தும் அவர்களின் கோபம் தணியவில்லை..
தாக்குதலில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அருள்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பசேரா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து நெல்லை மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய 13 பேர் கைது செய்யப்பட்டனர். மணப்பெண்ணின் தந்தை முருகவேல், தாய் சரஸ்வதி, குறிப்பிட்ட சாதி சங்கத்தைச் சேர்ந்த மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் பந்தல்ராஜா மற்றும் 5 பெண்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
