நாளை ‘அட்சய திருதியை’-என்ன வாங்கலாம்?
ஒவ்வொரு நாளுக்குமே ஒரு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் ஒரு சிறப்பான நாள் தான் அட்சய திருதியை.
‘அட்சயம்” என்றால் வளர்வது மற்றும் குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பலனை தரும்.
அந்த நாளில் நீங்கள் எது வாங்கினாலும் மென்மேலும் வளரும், தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நமக்கு நன்மையை கொடுக்கும்.
சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியை திதியை நாம் அட்சய திருதியை என்று அழைக்கிறோம்.
அந்த வகையில் அட்சய திருதியை இந்த வருடம் (2024) நாளை வெள்ளிக்கிழமை வருகிறது.
இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொன், பொருள் ஆபரணங்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை!
‘அட்சய திருதியை” அன்று நாம் என்ன செய்ய வேண்டும்? என்னவெல்லாம் வாங்க வேண்டும்? என்பதை பற்றி பார்க்கலாம்…
அட்சய திருதியை அன்று என்னென்ன வாங்கலாம்?
அட்சய திருதியை அன்று நாம் செய்யும் நன்மைகள் பன்மடங்காக பெருகி, அழியாத பலன்களை பெற்று தரும். எனவே, அன்றைய தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம்.
அது தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல. பச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றையும் நாம் வாங்கலாம்.
ஏனெனில் இயற்கை தோன்றும்போது, முதலில் வந்தவை இவைதான்.
தங்கம் வாங்கினால் மட்டுமே பெருகும் என்பதில்லை. அன்றைய தினம் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பதுதான் ஐதீகம்.
அன்றைய நாளில் தங்கம் வாங்க முடியாதவர்கள் உப்பு மற்றும் மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு போன்றவை வாங்கலாம். அதிலும் கஸ்தூரி மஞ்சள் வாங்கினால் இன்னும் சிறப்பு. கஸ்தூரி மஞ்சளுக்கு தனி சக்தி உண்டு. அதனால் அதை வீட்டில் வாங்கி வைக்கலாம்.
எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் யாரை வழிபடலாம்?
அஸ்வினி, மகம், மூலம் : விநாயகர்
பரணி, பூரம், பூராடம் : ரங்கநாதர்
ரோகிணி, அஸ்தம், திருவோணம் : சிவன்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் : துர்க்கை
திருவாதிரை, சுவாதி, சதயம் : பைரவர்
புனர்பூசம், விசாகம், பூராட்டாதி : ராகவேந்திரர்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி : சிவன்
ஆயில்யம், கேட்டை, ரேவதி : பெருமாள்
உத்திரம், உத்திராடம், கார்த்திகை : முருகன்
அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டும் அல்ல எந்த பொருளை சேமித்தாலும் அது நன்மையே…!