சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ; பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்
மராட்டிய மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி தமிழ்நாட்டில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இன்று (9-ந்தேதி)மாலை மராட்டிய மாநிலம் கோண்டியாவில் இருந்து விமானப் படை விமானம் மூலம் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு கிண்டி, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம், ஜி.என்.செட்டி ரோடு வழியாக பனகல் பார்க் வந்தார். வழி நெடுக பொதுமக்கள் மற்றும் பாஜக கூட்டணி கட்சி தொன்டர்கள் கூறி இருந்து வரவேற்பு அளித்தனர்.
பனகல் பார்க் அருகில் இருந்து பிரதமர் மோடியின் ரோடு ஷோ தொடங்கியது. திறந்த வேனில் மோடியுடன் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்த்தரராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இருந்தனர்..
பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை ரோடு ஷோ நடந்தது,. தென்சென்னை பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ்செல்வம் (மத்திய சென்னை), பால்கனகராஜ் (வடசென்னை) ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.
வழிநெடுக சாலையின் இருபுறமும் கூடியிருந்தவர்கள் மோடியை பார்த்து உற்சாக குரல் எழுப்பினர். மலர்களை அள்ளி வீசினார்கள். வேனில் இருந்த மோடி தாமரை சின்னத்தை கையில் வைத்து இருந்தார்,.
ரோடு ஷோ நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி கிண்டி கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
நாளை(10-ந் தேதி) காலையில் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வேலூர், செல்கிறார். காலை 10.30 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் 11.50 மணிக்கு சென்னை வருகிறார்.
சென்னையில் இருந்து விமானப்படை விமானம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி நீலகிரி தொகுதி பா.ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.
பின்னர் மராட்டிய மாநிலம் புறப்பட்டு செல்கிறார்.