• April 27, 2024

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் : அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன? அரசு வழங்க ஐகோர்ட்டு  உத்தரவு

 தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் : அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன? அரசு வழங்க ஐகோர்ட்டு  உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது.

இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் வக்கீல் ஹென்றி திபேன் தாக்கல் செய்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் நீதிபதிகள் பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ‘நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், தேர்தல் முடிந்து பிறகு இந்த வழக்கை விசாரிக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது, மனுதாரர் ஹென்றி திபேன் ஆஜராகி, இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள், கலெக்டர், போலீஸ்காரர்கள் உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற தற்போதைய நிலவரம் எதையும் அரசு வெளியிடவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் கூட பழைய நிலவரம் கொண்ட அறிக்கையைத்தான் அரசு தாக்கல் செய்துள்ளது. அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தற்போதைய நிலவரம் கொண்ட அறிக்கையை எனக்கு தருவதாக அரசு தரப்பில் கடந்த முறை கூறப்பட்டது. அந்த அறிக்கை தற்போது இருந்தால், அதை வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.

அதற்கு அரசு தரப்பில், புதிய அறிக்கை தயாராக உள்ளது. அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்கிறோம் என்று பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அந்த அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 25-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *