திமுக வின் தேர்தல் வாக்குறுதிகள் காதில் பூ சுற்றும் செயல்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் வைத்து கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தலைமைக் கழக நிர்வாகிகள் ஆசி பெற்றனர்.
பின்னர் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான டி ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது :-
மத்திய அரசுடன் உத்தரவு போடும் இடத்தில் 17 ஆண்டுகளாக பலமிக்க கட்சியாக திமுக ஆட்சியில் இருந்தும், தமிழக உரிமைகள் எதையும் பெற்றுத்தர திமுகவினர் முயற்சிக்கவில்லை.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக அரசு வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை ஒரு வெற்று அறிக்கை. ஆட்சியில் இருக்கும் பொழுது மாநில உரிமைகளை மத்திய அரசிடம் தாரை வார்த்து கொடுத்துவிட்டு, தற்போது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவோம் என வாக்குறுதி அளிப்பது காதில் பூச்சூடும் செயல்.
2021 சட்டமன்றத் தேர்தலில் டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்போம் எனவும், பெட்ரோல் டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துவிட்டு அவற்றை நிறைவேற்றாமல், தற்போது மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகளில், டீசல் விலையை 75 ரூபாயாக குறைக்க நடவடிக்கை எடுப்போம் என சொல்வது யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சிலிண்டர் விலையில் 100 ரூபாய் மானியம் அளிக்கப்படும் என 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்துவிட்டு, மூன்று ஆண்டுகளாக அவற்றை நிறைவேற்றாமல், தற்போது மீண்டும் பல மடங்கு விலையை குறைப்போம் என வாக்குறுதி அளித்திருப்பதை பார்க்கும் பொழுது வாய் சொல் வீரர்களாகவே திமுகவினர் இருப்பதை பார்க்க முடிகிறது
இலங்கை கடற்படையால் தமிழக வீரர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கதையாக இருக்கும்போது, இதுவரையில் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தமிழக முதலமைச்சர் ஒரு முறையாவது கண்டனம் தெரிவித்து இருப்பார
தற்போது கட்சத் தீவை மீட்போம் என சொல்வது ஏற்புடையதாக இல்லை. 1974 திமுக ஆட்சியில் இருந்தபோது தற்போதைய முதலமைச்சரின் தந்தையான கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த பொழுது, கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்துவிட்டு தற்போது அதே கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி அளிப்பதை ஏற்க முடியுமா?
பாஜகவை எதிர்த்தால் ஜெயில் அல்லது பெயில் என்பதை போன்று தான் பாஜகவின் செயல்பாடு உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, மத்திய அரசின் அமைப்புகளை ஏவி விட்டு இதுபோன்ற கைது நடவடிக்கைகளை செய்வது எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கும் செயல் இது ஒரு தவறான செயல். தமிழகம் புதுவையில் அனைத்து இடங்களிலும் அதிமுக வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள். பாஜக தலைவர் அண்ணாமலை டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.