கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் தமிழ் தெரியாத ஊழியரால் மீண்டும் அமளி

மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரெயில் நிலையங்களில் கோவில்பட்டி ரெயில் நிலையம் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிக அளவிலான மக்கள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் இந்த ரெயில்வே நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற ஒரு கவுண்ட்டர் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு விட்டது.
மேலும் இந்த கவுண்ட்டரில் இருக்கும் ஊழியருக்கு தமிழ் தெரியாது. வடமாநிலத்தை சேர்ந்தகர்கள் பணியில் இருக்கிறார்கள்.
இதன் காரணமாக அடிக்கடி குளறுபடி ஏற்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு மொழி பிரச்சினை காரணமாக அமளி ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று தமிழ் தெரியாத வடமாநிலத்தை சேர்ந்த பணியாளரால் அமளி ஏற்பட்டது. கவுண்ட்டரில் இருந்தவருக்கு தமிழ், ஆங்கிலம் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்தி மட்டும் தெரிந்து இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்தவர்கள், தட்கல் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யவந்தவர்கள் கூறிய விபரங்களை புரிந்து கொள்ள முடியமால் அந்த பணியாளர் திணறினார்.

.இதனால் தட்கலில் முன்பதிவு செய்ய வந்தவர்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். மேலும் ரெயில் பயணத்துக்குரிய முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க வந்தவர்களும் சிரமப்பட்டனர்.
30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை காத்திருத்ததால் ஆத்திரமடைந்த பயணிகள், ரெயில்வே ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில் நிலைய போலீசார் மற்றும் கிழக்கு காவல்நிலைய போலீசார் விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் ரெயில் நிலைய மேலாளர் அலுவலகம் சென்று புகார் கொடுக்க சென்ற போது அங்கு பணியில் இருந்த ஊழியர் அலட்சியமாக பதில் கூறியதால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினையும் சமாதானப்படுத்தினர்
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் தொடரும் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
