கோவில்பட்டி ஓவியருக்கு தமிழக அரசின் `கலைச்செம்மல்’ விருது

தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை தமிழ்நாடு ஓவிய நுண்கலைகுழு வாயிலாக மரபுவழி மற்றும் நவீன பாணி கலை பிரிவுகளைச் சார்ந்த புகழ்பெற்ற ஓவிய,சிற்பக் கலைகளில் செய்து வரும் அரிய சாதனைகளை பாராட்டும் வகையில் கலைச்செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2023-24 ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த தஞ்சை மரபு வழி ஓவியர் வேல்முருகனுக்கு `கலைச்செம்மல்’ விருது வழங்கப்பட்டது.
சென்னை இசைக் கல்லூரியில் நடந்த கலைச் செம்மல் விருது வழங்கும் விழாவில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் கலைச்செம்மல் விருதுடன் ரூ1லட்சம் காசோலையும் கோவில்பட்டி ஓவியர் வேல்முருகனுக்கு வழங்கினார்.
கலைச்செம்மல் விருது பெற்ற வேல்முருகனை சுற்றுலா பண்பாடு அறநிலையங்கள் துறை அரசு செயலாளர் மணிவாசன், கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் காந்தி, மற்றும் கோவில்பட்டி பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் பாராட்டினர்.
கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் 1942ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த மாடசாமி முதலியாரின் பேரன் வேல்முருகன் ஆவார்.
இவர் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து பணி நிறைவு பெற்றவர். தற்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தஞ்சை ஓவியங்களை வரைவது பற்றி எப்படி என்பது பற்றி கற்றுக் கொடுத்து வருகிறார்.
