காமநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாக கட்டிடம் திறப்பு

கோவில்பட்டி கல்வி மாவட்டம் காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிதலமடைந்து இருந்த சுகாதார வளாக கட்டிடத்தை கோவில்பட்டி ஜே.சி.ஐ. மற்றும் கல்பகலட்சுமி அறக்கட்டளை இணைந்து ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டன.
இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து சுகாதார வளாக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.
மேலும் கடந்த ஆகஸ்ட் 7 ம் தேதி ஜே.சி.ஐ. சார்பில் நடந்த தேசிய அளவிலான திறனாய்வு தேர்வில் மண்டல அளவில் முதலிடம் பெற்ற அக்சிதா என்ற மாணவிக்கு அவர் பரிசு வழங்கி பாராட்டினார்.
விழாவுக்கு கோவில்பட்டி ஜே.சி.ஐ. தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். அடுத்த ஆண்டுக்கான ஜே.சி.ஐ. மண்டல தலைவர் சிபி, மண்டல செயலாளர் சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கோவில்பட்டி ஜே.சி.ஐ. அடுத்த ஆண்டுக்கான தலைவர் ஆர்.எஸ்.வெங்கடேஷ் , செயலாளர் அருண்பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
விழா தொடக்கத்தில் .பள்ளி தலைமை ஆசிரியை மணிமதி அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஜே.சி.ஐ. செயலாளர் சூர்யா நன்றி கூறினார்.
