அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்;உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் இடைக்கால பொது செயலாளராக அவரது வி.கே சசிகலா, துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன் பிறகு நடைபெற்ற அ.தி.மு..க.வின் பொதுக்குழுவில் சசிகலா, தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் கடந்த 2017ஆம் ஆண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியில் இருந்தும், இடைக்கால பொதுச் செயலாளராக இருந்தும் நீக்கியது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சசிகலா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணை நடைபெற்றது.
அப்போது சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலன் ஆஜராகி, “கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை. அந்த கூட்டத்தில் அவர்களாகவே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யபட்டனர். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தபோது கூட எந்தவிதமான எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சசிகலா தற்போது வரை அ.தி.மு.க.வில் உறுப்பினராகதான் உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான்” என்றார்.
அ.தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான, “மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், விதிகளின் படி நடைபெற்ற பொதுக்குழு என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின்படி கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே சசிகலா மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் , சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, உரிமையியல் நீதிமன்ற உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்துள்ளனர்
