தனியாக வசித்த பெண்வெட்டிக்கொலை

கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனியை சேர்ந்தவர் குருசாமி. இவர் தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி முத்துலட்சுமி (65). இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குருசாமி இறந்து விட்டார். இதனால் முத்துலட்சுமி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று காலையில் முத்துலட்சுமியின் உறவினருக்கு திருமணம் நடந்தது. ஆனால் அவர், திருமண விழாவுக்கு செல்லவில்லை. அவரது செல்போனுக்கு உறவினர்கள் தொடர்பு கொண்டபோதிலும் பதில் இல்லை. இதையடுத்து மாலையில் முத்துலட்சுமியை தேடி, அவரது வீட்டுக்கு உறவினர்கள் சென்றனர். அப்போது அவரது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முத்துலட்சுமி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டின் பின்பக்க வாசல் படிக்கட்டில் முத்துலட்சுமி தலையில் அரிவாள் வெட்டுக்காயத்துடன் பிணமாக கிடந்தார். அவரது இடதுகையிலும் வெட்டுக்காயத்தால் விரல்கள் சிதைந்து இருந்தன. முத்துலட்சுமி வீட்டில் தனியாக வசித்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவர் பின்பக்க வாசல் வழியாக வெளியே வந்தபோது, காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து உள்ளே சென்று, அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட முத்துலட்சுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
