திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் போராட்டம்; 200க்கும் மேற்பட்டோர் கைது

திருசெந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கந்த சஷ்டி நாட்களில் தரிசன கட்டணம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. ரூ.100 சிறப்பு தரிசன கட்டணம் ரூ.1௦௦௦ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.500 லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்த கட்டணம் உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. எனினும் விரைவான தரிசனத்துக்காக ரூ.1௦௦௦ செலுத்தி சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா, மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல், கோட்ட செயலாளர் ஆறுமுகசாமி, கோட்ட தலைவர் தங்கமனோகர் ஆகியோர் உட்பட இந்து முன்னணி தொண்டர்கள் முருக பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆயிரம் இரண்டாயிரம் மூவாயிரம் என கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த கோரி கோஷம் எழுப்பினர்
தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூர் கோவில் அலுவலகம் முன்பு பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் , கூட்டத்தினரை அப்புறப்படுத்த முயற்சி செய்தார். அப்போது போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது .இதனால் திருச்செந்தூர் கிழக்கு பிரகாரம் போர்க்களம் போல் காட்சி ஆனது. இதை தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது செய்யப்பட்டு திருச்செந்தூர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்
