கப்பல் பணியாளர் வீட்டில் 25 பவுன் நகைகள்-ரூ.5. லட்சம் கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலையை சேர்ந்தவர் ரொபிஸ்டன் (வயது 56). இவர் துபாயில் கப்பலில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி- மகன் ஆகியோர் சென்னையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆலந்தலை தெற்கு தெருவில் உள்ள ரொபிஸ்டன் அக்கா ஜோஸ்லின் (64) வீடு கட்டி வருவதால், கடந்த 10 நாட்களாக ரொபிஸ்டன் வீட்டில் இரவு தங்கி வந்தார்.
சம்பவத்தன்று இரவு ரொபிஸ்டன் வீட்டிற்கு ஜோஸ்லின் சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து தாலுகா போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ரொபிஸ்டன் வீட்டின் அருகே நீண்ட நேரமாக மர்ம கார் ஒன்று நின்று கொண்டிருந்த தாக தெரிய வந்தது.
இதனால் போலீசார் ஆலந்தலை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு காரில் வந்தவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
