குண்டர் சட்டத்தில் கைதான போலீஸ் ஏட்டு டிஸ்மிஸ்; மாவட்ட சூப்பிரண்டு நடவடிக்கை

தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் பொன்மாரியப்பன். இவர் கடந்த 9.5.2021 அன்று தனக்கு உடல்நிலை சரியில்லை என்று உதவி ஆய்வாளரிடம் பிணி அறிக்கை செய்து, பிணிக்கடவுச்சீட்டு வாங்கி சென்றார்.
அதே நாள் இரவு தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த லூர்து ஜெயசீலன் என்பவரை கொலை செய்த வழக்கில் 10.5.2021 அன்று கைது செய்யப்பட்டார்.
பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நடுவர் உத்தரவின்படி கடந்த 22.5.2021 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது துறை ரீதியாக நடைபெற்ற விசாரணையில் மேற்படி ஏட்டு மீதான குற்றம் நிரூபணம் ஆனது. இதையடுத்து ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த காவல்துறையின் கட்டுக் கோப்பை சீர்குலைத்து பொதுமக்களின் மத்தியில் காவல்துறையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் குற்றசெயல் புரிந்துள்ள ஏட்டு பொன்மாரியப்பனை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்
