கோவில்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்; சனிக்கிழமை நடக்கிறது

கோவில்பட்டியில் 23ம் தேதி சனிக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் ஆணைப்படி டாக்டர்.கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு; தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய மூன்று கோட்டங்களில்; உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 23.9.2023 அன்று கோவில்பட்டி அரசு மகளிர்;மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள் இம்முகாமில் கலந்து பெற்றுக் கொள்ளலாம். தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பெறாதவர்கள் இம்முகாமில் பதிவு செய்யலாம்.
இதுவரை முதலமைச்சர் காப்பீட்டு அட்டை பெறாதவர்கள் இம்முகாமில் கலந்து பெற்றுக்கொள்ளலாம். ஆதார் பெற இயலாதவர்களுக்கு சிறப்பு ஆதார் முகாம் மற்றும் மருத்துவ துறையின் மூலம் பொது மருத்துவ சேவை வழங்கப்படும்.
மேலும் 90%-க்கும் அதிக பாதிப்புடைய கை கால் பாதிக்கப்பட்ட நபர்கள் முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் மூளை முடக்குவாதம் மற்றும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கபட்ட நபர்களுக்கான கூடுதல் பராமரிப்பு உதவித்தொகை வேண்டுபவர்கள் முகாமில் நடைபெறும் மருத்துவகுழுவின் தேர்வில் கலந்து கொள்ளலாம். கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இம்முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.
