• May 17, 2024

திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை  24-ம் தேதி தொடக்கம்; கோவில்பட்டியில் நிற்காது

 திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை  24-ம் தேதி தொடக்கம்; கோவில்பட்டியில் நிற்காது

நாட்டின் முதல் வந்தே பாரத் ரெயில் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இந்த ரெயிலின் சேவை டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி தொடங்கியது. தற்போது, வந்தே பாரத் ரெயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

தெற்கு ரெயில்வேயில் சென்னை-மைசூரு, சென்னை-கோவை, திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. அதிவேக பயணம், குளிர்சாதன வசதி உள்ளிட்ட காரணங்களால் பயணிகள் மத்தியில் வந்தே பாரத் ரெயிலுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு  வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்து வந்தது. இதனால் தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை-திருநெல்வேலி  இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதற்காக திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்க தேவையான முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட பிட்லைன் பணிகள் ஆகியவை துரிதமாக முடிக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருநெல்வேலி -சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ரெயில் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அன்றைய தினம் திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தில் தொடக்க விழா நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு ரெயில் சேவையை தொடங்கிவைக்கிறார்.

திருநெல்வேலியில் இருந்து காலை 11 முதல் 11.30 மணிக்குள் வந்தே பாரத் ரெயில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் நோக்கி புறப்படும். அன்றைய தினம் நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில் சேவையை மோடி தொடங்கிவைக்கிறார்.

திருநெல்வேலியில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் 7.15க்கு விருதுநகர், 7.50 க்கு மதுரை, 8.40க்கு திண்டுக்கல், 9.55க்குதிருச்சி, மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

அதேபோல, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45க்கு திருச்சி,.இரவு 7.55க்கு திண்டுக்கல். 8.45க்கு மதுரை, 9.15 க்கு விருதுநகர், இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும் வகையில் கால அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களிலும் இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

திருநெல்வேலி -சென்னை வந்தே பாரத் ரெயில் மொத்தம் 8 பெட்டிகளை கொண்டது. இதில் ஒரு பெட்டி வி.ஐ.பி.க்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் 552 பேர் பயணிக்க முடியும். ரெயில் கட்டண விவரம் விரைவில் வெளியிடப்படும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை கோட்டத்தில்  அதிக வருமானம் தரும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் நிற்காது. இதனால் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த ரெயிலில் சென்னைக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் திருநெல்வேலி அல்லது விருதுநகருக்கு தான் செல்ல வேண்டும்.

கோவில்பட்டியில் இந்த ரெயில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. அனேகமாக விரைவில் கோவில்பட்டியில் இந்த ரெயில் நின்று செல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்தனர்.

.சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியாக மாறியதில் இருந்து கோவில்பட்டி நகரம் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *