• June 7, 2025

எம்.ஜி.ஆர். சிலை அவமதிப்பு : பெயிண்டை அகற்றி, டி.ஜெயக்குமார் பால் அபிஷேகம்

 எம்.ஜி.ஆர். சிலை அவமதிப்பு : பெயிண்டை அகற்றி, டி.ஜெயக்குமார் பால் அபிஷேகம்

சென்னை:- ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவில் இருக்கும்  எம்.ஜி.ஆர். திருவுருவ சிலையை மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் சிவப்பு நிற பெயிண்டை ஊற்றி அவமதிப்பு செய்து உள்ளனர். மறுநாள் காலையில் இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க. வினர் அதிக அளவில் அங்கு கூடினர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது.

முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் நேரில் வந்து எம்ஜிஆர் சிலையை பார்வையிட்டார். சிலை மீது இருந்த சிவப்பு நிற பெயிண்டை  தின்னர் மூலம்  அழித்து தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தார். பின்னர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக  அங்கு இருந்து எம்.ஜி.ஆர். சிலையை சுத்தம் செய்த டி.ஜெயக்குமாரின் செயலை அந்த பகுதியினர் பாராட்டினார்கள். எம்.ஜி,ஆர்.மீதும் கட்சியின் மீதும் அவர் வைத்திருக்கும் மரியாதையை கண்டு பாராட்டினார்கள்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

 முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின்  திட்டங்கள் இன்றும் மக்கள் மனதில் என்றும் நீங்கா திட்டங்களாக இருந்து வருகிறது. எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலையை சேதப்படுத்திய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். சேதப்படுத்திய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த நபரின் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்று காவல்துறையினர் விசாரித்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.கைது செய்யவில்லை என்றால் இந்த சம்பவத்திற்கு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும்.

மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தமிழகத்திற்கு செய்த பல்வேறு நலத்திட்டங்களால் மக்கள் மனதில்  இன்றும் வாழ்ந்து வருகிறார். அவர் மறைந்து 35 ஆண்டுகள் ஆனாலும் அவரின் சிலையை பார்த்து அஞ்சக்கூடிய இயக்கமாக தி.மு.க.வினர் இருந்து வருகிறார்கள். தைரியம், திராணி இல்லாமல் நேருக்கு நேர் தி,மு,க,வினர் சந்திக்க முடியாமல் ஒரு பிற்போக்குத்தனமாக இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வண்ணம் பூசினால் மட்டும் எம்.ஜி.ஆரின் திட்டங்களை மூடி மறைத்து விட முடியுமா? இந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளது அதன் அடிப்படையில் புகார் அளித்துள்ளோம். உடனடியாக கைது செய்யப்பட்ட ஒருவரின் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்று காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *