தீப்பெட்டி ஆலை அலுவலகத்தில் தீ விபத்து – பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

கோவில்பட்டியை அடுத்த திட்டங்குளத்தில் செயல்பட்டு வரும் தொழிற்பேட்டையில் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், முகமது இஸ்மாயில் ஆகியோருக்கு சொந்தமான கோவில்பட்டி மேட்ச் கம்பெனி என்ற தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது.
அந்த ஆலையின் அலுவலகத்தில் இன்று காலையில் திடீரென அதிகளவில் புகைமூட்டம் வந்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த பாதுகாவலர்கள் அலுவலக அறைக்கு சென்று பார்த்தபோது தீப்பிடித்து மளமளவென எரிந்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீயணைப்புத் துறையினர் பயன்படுத்திய குழாயில் (பைப்) ஆங்காங்கே ஓட்டைகள் இருந்ததால் தண்ணீர் வீணாக வெளியேறியது. அதிக அளவு வெளியே சென்றதால் , தண்ணீர் இல்லாமல் சிறிது நேரம் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
தீவிபத்தில் அலுவலகத்தில் இருந்த கோப்புகள், தீப்பெட்டி இயந்திரங்களுக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் 12 முதல் 15 லட்சம் வரை இருக்கும் கூறப்படுகிறது . காலை நேரம் என்பதால் பணியாளர்கள் யாரும் வரவில்லை. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
