அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை உயிரை காப்பாற்றவே கை அகற்றம்; விசாரணைக்குழு அறிக்கை வெளியீடு
![அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை உயிரை காப்பாற்றவே கை அகற்றம்; விசாரணைக்குழு அறிக்கை வெளியீடு](https://tn96news.com/wp-content/uploads/2023/07/1739478-untitled-2-850x560.jpg)
சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 1½ வயது குழந்தை முகம்மது மகிருக்கு ரத்த உறைதலால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டது. இக்குழந்தைக்கு கடந்த 2-ந்தேதி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து வலது கையை அகற்றினர்.
குழந்தையின் இந்த நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி வார்டில் இருந்த நர்சின் அலட்சியமே காரணம் என்று குழந்தையின் தாய் அஜிஷா குற்றம் சாட்டினார். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் குழு ஒன்றை நியமித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். மேலும் குழந்தையை நேரில் சென்று பார்வையிட்டு, கவனக்குறைவு கண்டறியப்பட்டல் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்று தெரித்தார்.
இந்தநிலையில், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 1½ வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
pesudomonas என்ற கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால் வலது கையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. குழந்தைக்கு இரத்தநாள அடைப்பு மருந்தினாலோ, மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை.
வென்பிளான் (Venflon) ஊசியை தமனியில் போடவில்லை என்பது பெற்றோர் மருத்துவர்களின் வாக்குமூலத்தில் உறுதியானது. குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே காலதாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் உயிரை காக்கவே கை அகற்றப்பட்டது.
குழந்தையின் வலது கையில் வலி மற்றும் நிற மாற்றம் ஏற்பட்ட பின் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துள்ளனர் * குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் Thrombophlebitis என்று கணித்து சிகிச்சை அளித்துள்ளார். ரத்த ஓட்டம் பாதித்ததால் குழந்தையின் உயிரைக்காப்பாற்ற வலது கையை அகற்றவேண்டிய சூழல் ஏற்பட்டது. மருந்து கசிவினால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)