• June 8, 2025

செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; டி.ஜெயக்குமார் பேட்டி

 செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள வீட்டில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டி.யின் போது கூறியதாவது:-

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார். ஒட்டுமொத்தமாக தமிழக அரசின் விரக்தியின் வெளிப்பாடாக வரத்து பேட்டியை காண முடிகிறது. அம்மாவின் அரசு மீது புழுதுவாரி தூற்றியதோடு அல்லாமல் பல்வேறு வகைகளில் பல குற்றச்சாட்டுகளை எடுத்துவைத்த காரணத்தினால் எங்களுடைய மேலான பதிலை எடுத்துசொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

அவர் பேட்டியில் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது.இருண்டவன் கண்ணுக்கு  தெரிவதெல்லாம் பேய் என்ற அடிப்படையிலும்  அதுபோல புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துக்கொள்ளுங்கள் என்பதுபோலதான் விடியா அரசின் அமைச்சராக இருக்கின்ற சுப்பிரமணியனுடைய பேட்டி நேற்றைக்கு அமைந்துள்ளது.

அவர் பேட்டியில் குறிப்பிட்டது.செந்தில்பாலாஜி வீட்டில்  அமலாக்க சோதனை மற்றும் கைது குறித்து பேசும்போது  போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது  நடைபெற்ற ஊழல் என்றுகூறிவிட்டு உடனடியாக டாஸ்மாக் ஊழல் என்று முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்.

இதற்கு எங்களுடைய பதில்.செந்தில்பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது  நடந்த ஊழல் என்று சுப்பிரமணியம் பேட்டி அளித்துள்ளார். ஆம்.செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது  தவறு நடந்ததாக அறிந்தவுடன்  அம்மா உடனடியாக அவரை  அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார். மேலும் செந்தில்பாலாஜி மீது புகார் கொடுப்பவரிடமிருந்து புகாரை பெற்று பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை கூறியவர் அம்மா. அதன்படி காவல்துறை செந்தில்பாலாஜிக்கு எதிரான புகார்களை பதிவு செய்து  நடவடிக்கை எடுத்தது.

அதன்பிறகு அம்மா செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி தரவில்லை. ஆனால் அவரை அமைச்சராக்கியது இந்த விடியாத திமுக அரசு. அரசின் நிர்வாக திறனற்றவர் உங்களுடைய முதல்வர் ஸ்டாலின்தான். தன்னை அமைச்சராக்கிய முதல்வருக்கும்  அவரது குடும்பத்தினருக்கும் தக்க விசுவாசத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக காட்டியவர் செந்தில்பாலாஜி.

திமுக பங்குபெற்ற மத்திய காங்கிரஸ் ஆட்சியில்  கனிமொழி மற்றும் ராஜா ஆகியோரை 2 ஜி ஊழல் வழக்கில் கைது செய்யும் போது அமைதியாக இருந்த திமுக  ஒரு ஊழல் அமைச்சர் உச்சநீதிமன்ற ஆணையின்படி  அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கைது செய்தபோது  முதல்வர் முதல் அனைத்து அமைச்சர்களும்  இரவெல்லாம் தூங்காமல்  மருத்துவமனையை சுற்றி,சுற்றி வருவதை பார்க்கும்போது செந்தில்பாலாஜி அமலாக்கதுறையினரிடம் தங்களுக்கு  எதிராக ஊழல் குறித்த வாக்குமூலம்  அளித்து அதன் மூலம் தங்களை மாட்டிவிடுவாரோ என்று அஞ்சி நடுங்குவது  வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என்று மக்கள் பேசிகொள்கிறார்கள்.

அதேபோல சுப்பிரமணியன் தன்னுடைய பேட்டியில் கூறியது 2016 ல்  தலைமை செயலாளர் அறையில் நடைபெற்ற வருமானவரி சோதனைக்கும்,இப்போது  அமைச்சர் அறையில் நடைபெறும் அமலாக்க சோதனைக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

2016 ல் அப்போதைய தலைமை செயலாளர் அறையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியபோது  உங்கள் தலைவரும்,அப்போது எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின்  என்ன பேசினார்கள் என்பதற்கு உங்களுக்கு பதில் கொடுத்தவர்கள் சரியாக எழுதி கொடுக்கவில்லையா. வேண்டுமென்றால் உங்கள் நெம்பரை அனுப்புங்கள். நான் உங்களுக்கு அவர் பேசிய வீடியோவை  இப்போதே அனுப்பிவைக்கிறேன்.

அன்றைய தேதியில் தலைமை செயலாளர் அலுவலகத்தில்  சோதனை நடைபெற்றதற்கு சட்டம் தன் கடமையை செய்கிறது என்று சொன்னவர்  ஸ்டாலின். இன்று அவரது அமைச்சர் அறையில் சோதனை செய்வதை கண்டிக்கின்றார்.அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று  பிதற்றுகிறார். எந்த அளவுக்கு நேற்றைக்கு ஒரு சொல்.இன்றைக்கு ஒரு சொல் ,ஆட்சியில் இருக்கும்போது ஒன்று,ஆட்சியில் இல்லாதபோது ஒன்று என்று எப்படிப்பட்ட பித்தலாட்டம்,எப்படிப்பட்ட பச்சோந்திதனமாக அரசியலை ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார் என்பதை  தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள்.

இது எந்த வகையிலும் நியாயம் இல்லாத ஒன்று. மத்திய அமலாக்கத்துறை செந்தில்பாலாஜி மீது  பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கிறார்கள். முழு விபரம் பின்புதான் தெரியும். அதற்குள் திமுக முதல்வருக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் ஏன் இந்த படபடப்பு. ஏன் இந்த பயம். ஊழல் குற்றச்சாட்டு சுமந்தபட்ட ஒரு அமைச்சருக்கு  ஏன் பரிந்துவருகிறார்கள். வெட்கம்,மானம்,சூடு,சொரணை இருந்தால் விசாரணையை  தைரியமாக எதிர்கொள்ளவேண்டும்.

சுப்பிரமணியன்  உறவினருக்கு டெண்டர் வழங்கி 4 ஆயிரம் கோடி ஊழல் என்கிறார். இதற்கான பதில்.சென்னை உயர்நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஊழல் தடுப்பு துறையினரின் விசாரணை அறிக்கை அடங்கிய மூடி முத்திரையிட்ட கவரை பிரித்து படிக்காமலேயே சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தடையாணை பெற்றார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டுவந்தார்கள்.உச்ச நீதிமன்றம் ஊழல் தடுப்புத்துறையினர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை அடங்கிய மூடி முத்திரையிட்ட கவரை சென்னை உயர்நீதிமன்றம் பிரித்து பார்த்து அந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி  மீது வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ்.பாரதி அவர்களே இந்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நீதி மன்றத்தில் மனு செய்தது கூட  சுப்பிரமணியத்திற்கு தெரியாதா?

ஆனால், அந்த வழக்கை தொடர்ந்து நடத்த தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சொன்னவர், எங்கள் தலைவர் எடப்பாடியார்.

பேட்டி கொடுப்பதற்கு முன் விவரத்தை அறிந்து பேட்டி கொடுக்க வேண்டும். அறைகுறையாக பேட்டி கொடுக்க கூடாது. இது கூட தெரியாமல் 4000 கோடி ஊழல் என்று சுப்பிரமணியம் உளறுகிறார். இவர் அமைச்சராக இருப்பதற்கே தகுதியற்றவர்.

உங்கள் அமைச்சர் ஒருவர், விடியா திமுக அரசு மீதே 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றம் சுமத்தியுள்ளார். விரைவில் மத்திய அரசு இதையும் விசாரிக்கும் என்று பேசிக் கொள்கிறார்கள்.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் கள்ள ஓட்டு போட வந்த திமுக-வைச் சேர்ந்த ஒரு குற்றவாளியை பொதுமக்கள் முன்னிலையில் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தது தவறு என்று என்னை கைது செய்தார்கள்.பிறகு என்னை தொடர்ந்து ஜெயிலிலேயே அடைத்து வைக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தில், எனக்கு துளியும் சம்பந்தம் இல்லாத, எனது மருமகனின் அண்ணனை நில விவகாரத்தில் மிரட்டியதாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் மீண்டும் கைது செய்தனர். தொடர்ந்து 20 நாட்கள் நான் ஜெயிலில் இருந்தேன். இதுதான் மனித உரிமை மீறல்.

தற்போது இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதிலிருந்தே விடியா திமுக அரசு என்னை பழி வாங்கும் நோக்கில் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்பது மக்களுக்குத் தெரியும்.பி.ஜே.பி-ன் அடிமை எடப்பாடி பழனிசாமி  என்கிறார் சுப்பிரமணியன்.

2018ல் மக்களவையில் கழக மக்களவை உறுப்பினர்கள் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கையான காவேரி நதிநீர் பிரச்சனையை வலியுறுத்தி தொடர்ந்து 22 நாட்கள் மக்களவையை ஒத்திவைக்க செய்தனர்.அதைத் தொடர்ந்து மத்திய அரசு காவேரி நீர் முறைப்படுத்தும் குழு மற்றும் காவேரி ஒழுங்காற்று குழு ஆகிய இரண்டு குழுக்களை அமைத்து தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டது.ஆனால் உங்கள் கூட்டணி கட்சிகளுடன் உள்ள 38 எம்.பி-க்களை வைத்துள்ள நீங்கள் கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு என்ன செய்து கிழித்தீர்கள் ?

ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் ரத்து என்றீர்கள். 25 மாதங்கள் கடந்துவிட்டது. மற்றவர்கள் மீது ஜோடிக்கப்பட்ட புகார்களை கூறும் போது, உங்கள் முதுகில் உள்ள அழுக்கை மறந்துவிட்டு பேசலாமா?

சுப்பிரமணியன் அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுமனையை அபகரிக்க தன் மனைவியின் தகப்பன் பெயரையே மாற்றியவர்தான் இந்த சுப்பிரமணியன். இது சம்பந்தமாக இன்னும் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. காலம் பதில் சொல்லும். உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும்.

நீங்கள் யோக்கியமானவர்களாக இருந்தால் எதற்கு இந்த கபட நாடகம் ? சட்டத்தின் முன் நிரபராதி என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்.தமிழக வரலாற்றிலேயே, சட்டவிரோத பண பறிமாற்ற குற்றச்சாட்டில் ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு மாபெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பொறுப்பேற்று பொம்மை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ரிமாண்டில்  சிறைவைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *