நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை கண்டிக்க வேண்டாம் ; பெற்றோர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்

இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர 2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறி இருப்பதாவது:-
இத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் தோல்வியைக் கண்டு வருந்த வேண்டாம். தேர்வு மட்டுமே நமது வாழ்க்கையல்ல. தோல்வியை அடுத்த முறை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றுங்கள். இந்த தோல்வியை கண்டு துவண்டு விடாமல் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களுடன் விடாமுயற்சி செய்தால் நமக்கு வெற்றி நிச்சயம் வருங்காலங்களில் கிடைக்கும்.
மருத்துவ படிப்பு ஒன்று மட்டுமே வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதல்ல. பொறியியல் கல்வி, விவசாய கல்வி, பட்டய கணக்காளர் கல்வி, சட்டக்கல்வி, வணிகவியல், கலை மற்றும் அறிவியல் கல்வி போன்ற பல்வேறு படிப்புகள் உள்ளன, அவற்றை பயின்றும் வேலை வாய்ப்பு பெற்று உயர் பதவிகளை அடையலாம்.
எத்தனையோ பேர் சாதாரண பட்டப்படிப்புகள் பயின்று அகில இந்திய அளவில் உயரிய பதவிகளுடைய இந்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய் பணி போன்றவற்றில் தேர்வாகி மாவட்ட அதிகாரிகளாக பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். விடா முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் எந்த படிப்பு படித்தாலும் உயர்ந்த பதவியை அடையலாம்.
தோல்வியடைந்தவர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை கண்டிக்க வேண்டாம், தேர்ச்சி பெற்ற மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு, உங்கள் பிள்ளைகளை புண்படுத்த வேண்டாம். நம் குழந்தைகள் நமக்கு மிக, மிக முக்கியம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு பெற்றோர்கள் தங்கள் பொன்னான நேரத்தை பிள்ளைகளின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான சரியான பாதையை தேர்வு செய்வதில் மட்டுமே செலவிட்டு, அவர்களை வழிநடத்தி வெற்றியாளர்களாக மாற்றுமாறு பெற்றோர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் கூறி இருக்கிறார்..
