காலி குடங்களுடன் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு குடிநீர் விநியோகம்

கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பேரூராட்சி உட்பட்ட 15 வார்டுகளில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதியினர் குடிநீருக்கு அலைமோதுகிறார்கள்.இந்த நிலையில் தூத்துக்குடி அ.தி.மு.க. வடக்கு மாவட்டம் சார்பில் கழுகுமலை பேரூராட்சி நகர செயலாளர் முத்துராஜ் தலைமையில் கழுகுமலை காந்தி மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார் பெண்கள் பலர் காலி குடங்களுடன் கலந்து கொண்டு முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் போராட்டத்தில் காலிக் குடங்களுடன் கலந்து கொண்ட பெண்களுக்கு அ.தி.மு.க.வினர் தனியார் வாகனம் மூலமாக குடிநீர் வரவழைத்து விநியோகம் செய்தனர். குடிநீர் வரவில்லை என்று போராட்டத்துக்கு வந்த பெண்கள் ,ஒரு குடம் குடிநீருடன் வீட்டுக்கு கிளம்பி சென்றனர்.
