புனித சலேத் மாதா திருவிழா: முழங்காலிட்டு தேரை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த மறவபட்டிபுதூரில் பழமையான புனித சலேத் மாதா திருத்தலம் அமைந்துள்ளது. திருத்தலத்தின் ஆண்டு திருவிழா கடந்த 13ஆம் தேதி நவநாள் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
நவநாள் நடைபெற்ற நாட்களில் ஒவ்வொரு நாள் மாலையும் புனித சலேத் மாதாவின் திரு உருவம் தாங்கிய கொடி, மற்றும் புனித சலேத் மாதா மின் ரதம் போன்றவை ஜெபமாலை ஊர்வலத்துடன் நடைபெற்று நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

புனித சலேத் மாதா திருவிழா கொடியேற்று விழா கடந்த 21-ந் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கொடியேற்ற விழா திருப்பலி கிழக்கு மாரம்பாடி பங்குத்தந்தை லியோ ஜோசப் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து புனித சலேத் மாதா திருவுருவம் தாங்கிய கொடியுடன் ஜெபமாலை ஊர்வலம் நடத்தப்பட்டு ஆடம்பர கொடியேற்றம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 22 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு திருவிழா நடைபெற்றது. மறவபட்டி பங்குத்தந்தை சுரேஷ் சகாராஜ் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதன் பின்னர் புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் வைக்கப்பட்ட மின் ரத ஊர்வலம் மற்றும் வான வேடிக்கை நடைபெற்றது.
நேற்று 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பகல் பெருவிழா நடைபெற்றது. புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் ஏற்றப்பட்ட பகல் பெரிய தேர் பவனி நடைபெற்றது.
தேர் பவனியின் இறுதியில் புனித சலேத் மாதா சொரூபம் தாங்கிய சப்பரம் புனித சலேத் மாதா திருத்தலம் முன்பாக நிலை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏராளமான ஆண்களும் பெண்களும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி முழங்காலிட்டு சுற்றி வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
திருவிழா ஏற்பாடுகளை ஊர் பெரிதனக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
