அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவு

அ.தி.மு.க.வை நிர்வகிக்கும் அதிகாரத்தை பெறுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த ஒரு உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆனாலும் இதை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காத நிலை இருந்துவந்தது. தேர்தல் கமிஷன் இதை அங்கீகரிக்க கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட வேண்டும் என தேர்தல் கமிஷனில் மனு அளித்தார். அதேநேரத்தில் தேர்தல் கமிஷனுக்கு இது தொடர்பாக உத்தரவிடக் கோரி டெல்லி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக உடனடியாக அங்கீகாரம் தந்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கவேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.. இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் உரிய முடிவை எடுத்து 21-ந் தேதிக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கான காலக்கெடு நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதை கருத்தில்கொண்டு தேர்தல் கமிஷன் இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தியது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் காலையிலும், மாலையிலும் 2 கட்ட அமர்வுகளில் இது தொடர்பாக ஆலோசித்தனர்.
இதை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஜூலை 11 அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது. கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவிப்பை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் உத்தரவு குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
“அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதன் மூலம், ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் செல்லும் என உறுதியாகியுள்ளது. அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி என்றால் அதிமுக. இனிமேல் ஏறுமுகம்தான். இனி வெற்றி மேல் வெற்றிகள் எடப்பாடியாருக்கு குவியும்.
அதிமுக பெயர், கட்சி கொடியை வேறு யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அ.தி.மு.க.வின் பெயர், சின்னம், கட்சியை யாரும் உரிமை கோரவோ, பயன்படுத்தவோ முடியாது”
இவ்வாறு அவர் கூறினார்.
