மதுரை -நத்தம் இடையே 7.5 கி.மீ. தூரத்துக்கு தமிழ்நாட்டின் மிக நீளமான பாலம்; மோடி நாளை திறக்கிறார்

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை தல்லாகுளம் ஐ.ஓ.சி. அலுவலகம் அருகே இருந்து, நத்தம் வரை 35 கிமீ தொலைவுக்கு ரூ.1,028 கோடியில் நான்குவழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, கடந்த 2018ஆம் ஆண்டில் தொடங்கியது.
இந்த சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கிமீ தூரத்துக்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பறக்கும் பாலத்தில் அடியில் 150 அடிக்கு ஒன்று என பலமான அஸ்திவாரத்துடன் 268 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. தூண்கள் இடையே பாலத்தை இணைக்கும் வகையில் கிடைமட்ட வாக்கில் கான்கிரீட் கர்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மதுரையில் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை, திருச்சி நகரங்களுக்கான பயணத்தின் தொலைவை குறைக்கவும் இந்த பறக்கும் பாலமும், நான்குவழி சாலையும் அமைக்கப்படுகிறது.

இந்த பறக்கும் பாலம் வழியாக திருச்சி செல்வோருக்கு 24 கிமீ பயண தூரம் குறையும் என கூறப்படுகிறது. இதே போல் பாலத்தின் வழியாக சென்னை செல்வோருக்கு ஒரு மணி நேரம் பயண நேரம் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து நாளை 8ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் இந்த பாலத்தை திறந்து வைக்கிறார். இதை முன்னிட்டு பாலத்தில் சோதனை ஓட்டமானது இன்று தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமாக பாலத்தில் தங்களது வாகனத்தில் கடந்து செல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் மிக நீளமான பாலமாக இது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மொத்த நீளம் 7.5 கிலோ மீட்டராக உள்ளது.
