• June 7, 2025

கோவில்பட்டி அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டனில் பூட்டிய வீட்டின் கதவு  உடைப்பு;மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம நபர்- சி.சி.டி.வி.காட்சி வெளியானது

 கோவில்பட்டி அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டனில் பூட்டிய வீட்டின் கதவு  உடைப்பு;மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம நபர்- சி.சி.டி.வி.காட்சி வெளியானது

கோவில்பட்டி அருகே அப்பனேரி பஞ்சாயத்து வெங்கடேஸ்வரா கார்டன் வேகமாக முன்னேறி வரும் பகுதி. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நிறைய வீடுகளின் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

இந்த பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஒரு கொள்ளையன் புகுந்து தனது கைவரிசையை காட்டி உள்ளான்.

பிரதான தெருவில், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சீனிவாசன் என்பவர் தனது வீட்டை பூட்டி விட்டு பெங்களுருவில் வசிக்கும் மகள் வீட்டுக்கு சென்று இருந்தார். இந்த வீட்டுக்குள் கொள்ளையன் புகுந்தான்.

இரும்பு கதவை தாண்டி குதித்து போர்டிகோ பகுதிக்குள் நுழைந்த அவன் மரக்கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து கைவரிசையை காட்டி இருக்கிறான். பின்னர் அவன் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டான்.

போகும்போது ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் சைடு லாக்கை லாவகமாக உடைத்து உருட்டி சென்று இருக்கிறான். அதனை ஸ்டார்ட் பண்ண முடியாமல் சிறிது தூரம் தள்ளி நிறுத்தி விட்டான். பிறகு இன்னொரு வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டான்,

இன்று காலையில் தான் கொள்ளை சம்பவம் பற்றி அக்கம்பக்கத்தினருக்கு தெரிய வந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு  ஏற்பட்டது. பெங்களூரு சென்று இருந்த சீனிவாசனுக்கு நடந்த சம்பவம் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர்  உடனடியாக கோவில்பட்டி புறப்பட்டார்.

இதற்கிடையே கோவில்பட்டி மேற்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கபட்டு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளையன் புகுந்த வீட்டினுள் சென்று பார்வையிட்டனர். வீட்டில் இருந்து நகை, பணம் எதுவும் திருட்டு போனதா என்று தெரியவில்லை. வீட்டின் உரிமையாளர் சீனிவாசன் வந்தவுடன் தான் தெரியவரும்.

மேலும் கொள்ளையன், வீட்டில் இருந்த மதுபானத்தை எடுத்து அங்கு வைத்தே குடித்து இருக்கிறான். இதற்கான அடையாளம் காணப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையன் பற்றிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும் இரு சக்கர வாகனங்கள் திருட்டு போன வீடுகளுக்கு போலீசார் சென்று பார்த்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

மேலும் கொள்ளை நடந்த வீட்டின் அருகே  இருக்கும் சி.சி.டி.வி.கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் மோட்டார் சைக்கிளை தொப்பி அணிந்த மர்ம நபர் , சைடு லாக்கை சாமர்த்தியமாக உடைத்து உருட்டி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இந்த துணிகர சம்பவம் பற்றி கோவில்பட்டி மேற்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் வெங்கடேஸ்வரா கார்டனுக்கு என்று இரவு காவலாளி கிடையாது. நாளுக்கு நாள் வீடுகள் பெருகி வருவதால் கண்டிப்பாக காவலாளி நியமித்து ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும் என்று குடியிருப்போர் நல சங்க தலைவர் கோலப்பன் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *