தூத்துக்குடியில் இருந்து ஏப்ரல் மாதத்துக்கு பிறகு இரவு நேர விமானங்கள் இயக்க வாய்ப்பு; கனிமொழி எம்பி தகவல்

தூத்துக்குடி ஜி.ஆர்.டி ஓட்டல் கூட்டரங்கில் இன்று விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் விமான நிலைய ஆலோசனைக் குழுத் தலைவர்/ தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், கனிமொழி எம்.பி.பேசுகையில் கூறியதாவது:-
தூத்துக்குடி விமான நிலையத்தில் ஓடுதளம் விரிவாக்கம் செய்யும் பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிந்துவிடும். பணிகள் முடிந்தவுடன் இரவு நேர விமானங்கள் இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமல்லாமல் விமான நிலைய அலுவலகத்திற்கான புதிய கட்டடமும் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். தற்போது, ஓடுதளம் அமைக்கும் பணிகள் 50 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் ஏப்ரல் மாதம் முடிக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், சார் ஆட்சியர் கவுரவ் குமார், விமான நிலைய இயக்குநர் சிவபிரசாத், குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
