கோவில்பட்டி நகராட்சி வருவாய் ஆய்வாளரை தாக்கியதாக 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் விரைவில் சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதற்கான கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக சந்தை இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
இதை எதிர்த்து சில கடைக்காரர்கள் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று செவ்வாய் கிழமை, நகராட்சி வருவாய் அலுவலர் பிரேம்குமார் தலைமையில் சில அலுவலர்கள் வாடகை பாக்கியுள்ள கடைகளை சீல் வைக்க தொடங்கினர்.
கடந்த மாதம் வரை வாடகை செலுத்தியுள்ளதாகவும், இந்த மாதம் செலுத்த கால அவகாசம் உள்ளதாக கூறி சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, வருவாய்ஆய்வாளர் பிரேம்குமாரை முற்றுகையிட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையெடுத்து போலீசார் பிரேம்குமாரை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி வியாபாரிகள் சந்தை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி கடையில் இருந்த சீலை அகற்றினர். இதற்கிடையே கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் நகராட்சி தினசரி சந்தை சீரமைப்பு தொடர்பாக அனைவரிடம் கருத்துக்கேட்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
இந்நிலையில் நகராட்சி வருவாய் ஆய்வாளரை பணி செய்யவிடமால் தடுத்து நிறுத்தி, தரக்குறைவாக பேசியதாக நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பார்த்தசாரதி கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பெயரில் சின்னமாடசாமி, குமார். செல்வம், சுரேஸ், தமிழரசன், பாலமுருகன் ஆகிய 6 பேர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்
