கோவில்பட்டி ஆட்டோ டிரைவர் கொலையில் மர்மம் நீடிக்கிறது

கோவில்பட்டியை அடுத்துள்ள கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கணேசன் (வயது 41) .இவர் தண்ணீர் டிராக்டர் டிரைவராகவும், ஆட்டோ டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.
கோவில்பட்டி வீர வாஞ்சி நகரில், குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு, ஆலம்பட்டி கண்மாயில் பிணமாக வீசப்பட்டுள்ளார்.
இது பற்றி நேற்று கோவில்பட்டி மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்- இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு கிடந்த கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆலம்பட்டி கண்மாயில் வைத்து அடித்துக் கொல்லப் பட்டாரா? அல்லது வேறு எங்காவது அவரை கொலை செய்து உடலை கொண்டு வந்து மர்ம நபர்கள் கண்மாயில் போட்டு விட்டு சென்றார்களா? என்பது தெரியவில்லை.
போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும் கொலையாளிகள் பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது,
