தி.மு.க. கூட்டணிகட்சிகள் இடையே முரண்பாடு; டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா ௬-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அனைவரும உறுதிமொழி எடுத்துகொன்டனர்,.
தொடர்ந்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க.வில் நான்கு அணிகளாகப் பிரிந்து அஞ்சலி செலுத்தும் நிலை உள்ளதே?
பதில்:-ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். பிரிவும் இல்லை. பிளவும் இல்லை. கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிலபேர் நீக்கப்பட்டுள்ளார்கள். 66 சட்டமன்ற உறுப்பினர்களில் 62 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்ட கழகத்தில்தான் இன்றைக்கும் இருக்கிறார்கள். தலைமைக்கழக நிர்வாகிகள் 75 பேரும் கழகத்தில்தான் இருக்கிறார்கள். மாவட்ட செயலாளர்கள் 75 பேரும் இன்றைக்குக் கழகத்தில்தான் உள்ளார்கள். அப்படியானால் எப்படிப் பிரிவு என்று சொல்கிறீர்கள்.
கட்சி விரோத நடவடிக்கையின் காரணமாக நீக்கப்பட்டவர்கள் ஒரு நாலுபேரை அழைத்துவந்துவிட்டு அவர்கள் இங்கு அஞ்சலி செலுத்துகிறார்கள் என்றால் அதனை எப்படி ஒரு சக்தியாக எடுத்துக்கொள்ள முடியும். அதனால் பிரிவும் இல்லை, பிளவும் இல்லை. அவர்கள் அணிகள் கிடையாது.பிணிகள்.
கேள்வி:-: ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள எதிர்க்கட்சித்தலைவரை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே. மத்திய அரசும்,பா.ஜ.க.வும் அவரை இடைக்கால பொதுச்செயலாளர் என்று ஏற்றுக்கொண்டுள்ளதா?
பதில்:- உலகத்திற்கே தெரியும், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று. அந்த அடிப்படையில் மத்திய அரசைப் பொறுத்தவரையில் அடுத்த ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியாவில் நடத்த இருக்கின்ற சூழ்நிலையிலே, இந்தியாவில் பல பகுதிகளில் கூட்டங்கள் நடக்கவுள்ள சூழ்நிலையிலே அகில இந்திய ரீதியில் தலைவர்களை அழைத்துள்ளார்கள். அந்த அடிப்படையிலே கழக இடைக்கால பொதுச்செயலாளரை அழைத்துள்ளார்கள். இது சட்டப்படியான விஷயம்தான்.
கேள்வி:- பா.ஜ.க.வின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு தான் என்று எடுத்துக்கொள்ளலாமா?
பதில்:- மத்திய அரசு அழைப்பதற்கும்,பா.ஜ.க.வுக்கும் எப்படி சம்பந்தபடுத்த முடியும். கட்சி வேறு.ஆட்சி வேறு இல்லையா. பா.ஜ.க. அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி அதில் அழைக்கப்பட்டிருந்தால் நீங்கள் சொல்லும் கருத்தை ஏற்றுக்கொள்ளாம். இந்த கூட்டத்தை மத்திய அரசுதானே கூட்டியுள்ளது. நீங்கள் இட்டுக் கட்டி முட்டுக் கொடுக்கிறீர்கள். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி தெளிவுப்படுத்தியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரையில் நாங்கள் மிகப்பெரிய இயக்கம். எங்களுக்கு சித்தாந்தம்,கொள்கை என்பது வேறு. எனவே இதனையும்,அதனையும் ஒன்றுசேர்க்ககூடாது. அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள்.எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம். இடைக்கால பொதுச்செயலாளர் என்பது பொதுக்குழுவால் அங்கீகாரப்பட்டு கட்சியால் ஏற்றுக்கொண்ட நிலையிலே அதன் அடிப்படையில் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
கேள்வி:- நான்கு அணிகளாகப் பிரிந்து உள்ளீர்களே.அந்த எண்ணிக்கை குறையுமா,அதிகரிக்குமா.
பதில் : ஏற்கனவே இடைக்கால பொதுச்செயலாளர் தெளிவுபடுத்திவிட்டார். அதனைத்தான் நானும் சொல்கிறேன். அவர் என்ன தெளிவுப்படுத்தினார். எந்த காலத்திலும் அவர்களுடன் தேர்தல் கூட்டணி கிடையாது. எந்த காலத்திலேயும் அவர்களை இணைத்துக்கொள்ளும் சூழ்நிலை கிடையாது. டி.டி.வி.தினகரன் நான் வர மாட்டேன் என்கிறார். ரொம்ப நல்லது. மீதிப் பேரும் அதேபோல போய்விட்டால் நல்லது.
கேள்வி:- எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி என்று கூறியுள்ளார். தி.மு.க.வில் உள்ள கட்சிகள் இங்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதா
பதில் :- திமுக என்ன நிலைமை இன்றைக்கு ,கட்சிக்குள் குமுறல் எழுந்துள்ளது. உள்ள குமுறல். நீறு பூத்த நெருப்பு. அதுபோல புகைந்துகொண்டுள்ளது.அதன் வெளிப்பாடுதான் முதலில் ஒரு பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது. ஆர்.எஸ்.பாரதி வந்துள்ளார். அவர் என்ன சொல்கிறார். உழைப்பவருக்கு மரியாதை இல்லை. உழைப்பவர்களுக்குப் பதவி இல்லை.எந்த மரியாதையும் இல்லை. நேற்று வந்தவர்களுக்கு எல்லாம் பதவி அளிக்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்கிறார். இது ஒரு கட்சியா என்று சொல்கிறார். முதல் நபராக அந்த கட்சியில் குரல் கொடுத்துள்ளார். அடுத்தடுத்து நிறையபேர் வருவார்கள். அந்த அளவுக்கு அந்த கட்சியின் நிலைமை உள்ளது.முதல்வர் ஸ்டாலினைப் பொறுத்தவரையில் அவருடைய மகனுக்கு முடிசூட்டவேண்டும். அந்த கவலைதான் அவருக்கு. இருக்கின்றதே தவிர வேறு ஒன்றும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததுபோல இங்கிருந்து சென்ற 8 பேர்தான் ஆட்சி செய்கிறார்கள். நேற்றே ஸ்டாலின் சொல்லிவிட்டரே சேகர்பாபு போன்ற பாபுகாரர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் என்னை வழிநடத்துகிறார்கள். அவர்களை வைத்துத்தான் வண்டி ஒட்டுகிறேன் என்று சொல்கிறார். ஒரு இயலாமையை அவரே வெளிபடுத்துகிறாரா இல்லையா. அப்படி என்றால் கட்சியும்,ஆட்சியும் அவர் கையில் இல்லை.
தி.மு.க. கூட்டணியில் பல கட்சிகள் முரண்பாட்டுடன் இருக்கின்றன.கம்யூனிட்ஸ்டுகள் முரண்பாட்டுடன் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க.வுக்கும் முரண்பாடு உள்ளது. விடுதலைசிறுத்தைகளை சேர்ந்த சென்னை கவுன்சிலரை தி.மு.க. வட்ட செயலாளர் சென்று மிரட்டுகிறார்.இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.,இதுபோன்ற உள்ள குமுறல் வெடித்துவருகிறது. கண்டிப்பாகத் தேர்தல் நெருங்கும்போது வெளிப்படும். இப்போது 11கட்சி என்கிறார்கள் இல்லையா. கட்டெரும்பு சிற்றெறும்பான கதையாக அது மாறும்.அது கண்டிப்பாக நடக்கும்.
திமுகவில்.உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்று சிந்தித்துவருகிறார்கள். கடைக்கோடி தொண்டனுக்கும் கூட அந்த கட்சியில் எந்த மரியாதையும் இல்லை என்று .ஜெயக்குமார் சொல்வது உண்மைதான் என்று தி.மு.க. தொண்டர்கள் கேட்டுவருகிறார்கள்.
ஸ்டாலின் குடும்பத்திலே குழப்பம்.தயாநிதிக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் என்று பொறுப்பு வழங்கியுள்ளார்கள்.துணை பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கவேண்டியதுதானே. உடனே ஸ்டாலின் இதற்குத் தயாநிதிக்கு போன் செய்வார்.நீ ஜெயக்குமாரை விட்டுச் சொல்ல சொல்லிவிட்டாயா என்று கேட்பார்.முரசொலி மாறன் குடும்பமும் இன்றைக்கு அதிருப்தியாக உள்ளது.ஒரு விஷயம் என்னவென்றால் ஸ்டாலின் சார்ந்த உதயநிதி,சபரீசன்.இவர்கள்தான் இன்றைக்கு ஆதிக்கசக்தியாக ஆட்சியிலேயும்,கட்சியிலும் இருக்கிறார்கள்.இது நிறையப் பேருக்கு பிடிக்கவில்லை.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
