2026-ல் பா.ம.க.தலைமையில் ஆட்சி; அன்புமணி ராமதாஸ் சொல்கிறார்

தமிழ்நாட்டின் ரெயில்வே திட்டங்கள் தொடர்பாக தென்னக ரெயில்வே மேலாளரை பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்துப் பேசினார். அதனை தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ரெயில்வேயில் புதிய திட்டங்கள் கொண்டு வர வேண்டும், ஏற்கனவே போடப்பட்ட திட்டங்கள் நிலுவையில் உள்ளது அந்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம். இரண்டாவது விமான நிலைய வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளில் ஆறு முறை பா.ம.க. அறிக்கை விட்டிருக்கிறது. ஏழை மக்கள் பயன்படுத்தக் கூடியது ரெயில்வே மட்டும் தான். ரெயில்வே துறை ஏழை மக்களை சார்ந்த கண்ணோட்டத்தில் இந்த துறை செயல்பட வேண்டும். ஏழை மக்களை சார்ந்து ரெயில்களை இயக்க வேண்டும் தொடர்ந்து, “மழை வந்தாலே சாபம் போல் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் அதை வரமாக பார்க்க வேண்டும்.
அடுத்து பத்து பதினைந்து ஆண்டுகளில் மழை குறைந்துவிடும் என்று தான் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள் இருக்கக்கூடிய மழையை நாம் சேமிக்க வேண்டும். சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஏரிகளை புதிதாக உருவாக்க வேண்டும். சென்னையில் இடம் இல்லை என்றாலும் மாமல்லபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் உருவாக்க வேண்டும்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சட்ட முன் வடிவில் கவர்னர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். கவர்னருக்கும் முதலமைச்சருக்கும் பிரச்சினை இருக்கக் கூடாது. அவர்கள் பேசி தீர்க்க வேண்டும். இதனால் தமிழக மக்களுக்கு தான் பிரச்சினை. கவர்னர் நடுநிலையாக இருக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலுக்கு தேவையான வியூகங்களை 2024ல் வகுப்போம். 2026ல் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வு.டன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பா.ம.க. 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றார்.
