தென் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங், சிலம்பம் போட்டிகள்;கோவில்பட்டியில் நடந்தன

கோவில்பட்டியில் போகஸ் ஸ்போர்ட்ஸ் இந்தியா சார்பில் மாவட்ட வில்வித்தை போட்டி மற்றும் தென் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங், சிலம்பம் போட்டிகள் நடந்தன. துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் நடந்த போட்டிகளை கல்லூரி செயலாளர் எஸ்.கண்ணன், முதல்வர் ஆர்.செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
வில்வித்தை போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஸ்கேட்டிங், சிலம்பம் போட்டிகளில் தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
வில்வித்தை போட்டியில் கோவில்பட்டி கே.ஆர்.ஏ. மெட்ரிக்- சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். அவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 2-வது இடத்தை திட்டங்குளம் ஹோலி டிரினிட்டி பள்ளி பிடித்தது.
தென் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கோவில்பட்டி கவுணியன் பள்ளி முதலிடத்தையும், எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி 2-வது இடத்தையும், ஹோலி டிரினிட்டி பள்ளி 3-வது இடத்தையும் பிடித்தன.
சிலம்பம் போட்டியில் எம்.எம். வித்யாஷ்ரம் பள்ளி முதலிடத்தையும், செயின்ட் பால்ஸ் பள்ளி 2-வது இடத்தையும், கவுணியன் பள்ளி 3-வது இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தொழிலதிபர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.உதய முத்துபாண்டி, போகஸ் ஸ்போர்ட்ஸ் இந்தியா தலைவர் ஜி.சைலஜா ஆகியோர் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வில்வித்தை சங்க தலைவர் ஆர்.ராஜேஷ் சந்திரன், துணை தலைவர் ஏ.கண்ணன், திருநெல்வேலி பொதுச்செயலாளர் ஏ.சண்முகநாதன், நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் செயலாளர் ஆர்.முருகன், தேசிய சிலம்பம் நடுவர் எஸ்.நல்லதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
