தமிழகத்தில் 2௦-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி தொடங்கியது. இதனால் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மழை பரவலாக கொட்டி தீர்த்தது.
அதன் பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கடந்த வாரம் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதில் அதிக அளவாக 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை வெளுத்து வாங்கியது.
இதற்கிடையே தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்துக்கு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் 20-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறியுள்ளது.
