திகார் சிறையில் மந்திரிக்கு மசாஜ்; மத்திய உள்துறை விளக்கம் கேட்கிறது

கெஜ்ரிவால் அரசில் மந்திரியாக இருக்கும் சத்யேந்தர் ஜெயின், பணமோசடி வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ளார்.
இவர் மீது அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
சத்யேந்திர ஜெயின் மனைவி பூனம் ஜெயினுக்கு, அவரது அறைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் அவர் திட்டமிடப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் அங்கேயே இருக்கிறார்.
சிறையில் தலை மசாஜ், கால் மசாஜ், முதுகு மசாஜ் என அனைத்து வசதிகளும் ஜெயினுக்கு அளிக்கப்படுகிறது. சத்யேந்திர ஜெயின் ஒரு மந்திரி என்றும், அதை அவர் நியாயமற்ற முறையில் பயன்படுத்திக் கொள்கிறார். என கூறி உள்ளது.
மேலும் டெல்லி மந்திரி சிறை அறையின் அனைத்து சி.சி.டி.வி. காட்சிகளையும் அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஆர்.பி.சிங், டெல்லி சிறை டெல்லி அரசின் கீழ் வருகிறது, அதனால்தான் எம்.எச்.ஏ. டெல்லி தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இந்த முழு விவகாரம் குறித்தும் பதிலளிக்கக் கோரியுள்ளது.
சத்யேந்திர ஜெயினுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் சி.சி.டி.வி. காட்சிகளும் வெளியாகியுள்ளன. எனவே, இப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் நோட்டீசுக்கு டெல்லி தலைமைச் செயலாளர் விரைவில் பதிலளிக்க வேண்டும் என கூறி உள்ளார்.
மே மாதம், பணமோசடி வழக்கில் ஜெயின் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, ஜெயின் மற்ற இலாகாக்கள், சுகாதாரம், உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்டவை துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும், டெல்லி மந்திரி சபையில் எந்த பொறுப்பும் இன்றி ஜெயின் அமைச்சராக இருக்கிறார்.
