தூத்துக்குடி மாவட்டத்தில் ‘ஜல் ஜீவன்’ திட்டத்துக்கு கிராம மக்கள் வரவேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமப்புறங்களில் ஊதா நிற குழாய்கள் வரிசையாக வீடுகளுக்குள் புகுந்து இருப்பதை பார்க்க முடிகிறது. இவை அனைத்தும் சாத்தியமானது, ஜல் ஜீவன் மிஷன் என்னும் உயிர்நீர் இயக்கத்தால்தான். இந்த உன்னத திட்டம் 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது.
2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் என்ற இலக்கோடு, 2019-ம் ஆண்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டாலும், 2020-21-ம் ஆண்டில்தான் தூத்துக்குடி மாவட்டத்தை எட்டியது. அந்த ஆண்டே வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. அதன்படி, 195 பஞ்சாயத்துகளில் உள்ள 734 குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான திட்டம் தீட்டப்பட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கியது. அதன் விளைவாக ஒரே ஆண்டில் ரூ.53 கோடியே 69 லட்சம் செலவில் 239 பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்மூலம் 195 பஞ்சாயத்துகளில் உள்ள 1 லட்சத்து 11 ஆயிரத்து 154 குடியிருப்புகளுக்கு உயிர் நீரான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து 2022-23-ம் ஆண்டு 39 பஞ்சாயத்துகளில் உள்ள 115 குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.14 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் 39 பஞ்சாயத்துகளிலும் 69 பணிகள் எடுக்கப்பட உள்ளது. இதன்மூலம் 16 ஆயிரத்து 231 வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்துக்கு கிராம மக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில் இந்த அற்புதமான திட்டம் இன்னும் அநேக மக்கள் பயன்பெறும் வகையில் விரைவு பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
