சாலை அமைக்கும் பணிக்கு கரிசல் மண் பயன்படுத்துவதா? விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா குமாரரெட்டியாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வெயிலுகந்தபுரம் முதல் கழுகுமலை வரை உள்ள வண்டிபாதையை 3 அடி உயர்த்தும் பணி நடக்கிறது. வண்டிப்பாதையின் இரு புறமும் உள்ள பகுதியில் இருந்து சுமார் 4 அடி முதல் 6 அடி வரை மண் எடுத்து, வண்டி பாதையை 2 அடி முதல் 3 அடி வரை கரிசல் மண் போட்டு உயர்த்தி உள்ளார்கள்.
இது இரண்டு மழைக்கு கூட தாங்காது. இந்த லேயரை செம்மண் கொண்டும் சரளை மண் கொண்டும் தான் உயர்த்தி இருக்கவேண்டும். ஒரு விளைநிலத்தில் இருந்து இன்னொரு விளை நிலத்துக்கு செல்லும் நீர் வழிபோக்கை மாற்றி உள்ளார்கள். நீர்வழி ஓடையை மறித்து உள்ளார்கள். அவரவர் விளைநிலம் செல்ல முடியாத அளவுக்கு இரண்டு பக்கங்களிலும் கரிசல் மண் எடுக்கப்பட்டு உள்ளது.

ரோட்டின் அகலம் ஒரு இடத்தில் 10 அடியும், இன்னொரு இடத்தில் 15 அடியும் உள்ளது. அளவில் வித்தியாசம் உள்ளதால் இரண்டு வண்டிகள் விலகி செல்ல முடியாத நிலையில், விளை நிலத்தில் தான் வண்டியை இறக்க வேண்டி இருக்கும்.
சர்வே அளவு சரியாக செய்யப்படவில்லை. அத்துடன், விவசாய பட்டா நிலங்களில் இருந்து நிலம் சட்டவிரோதமாக விவசாயிகளின் அனுமதி இல்லாமல் மற்றும் போதிய இழப்பீடு இல்லாமல் எடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, மேற்படி பிரச்சினைகளை சரி செய்யக் கோரி கையில் கரம்பை மண்ணை கைகளில் வைத்துக்கொண்டு கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
கோவில்பட்டி கோட்டாட்சி தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டம் தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் செந்தில்குமார், பரந்தாமன் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்ட இறுதியில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
