பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசனுக்கு ஜனாதிபதி விருது

2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றும் எம்.சுதேசன் பெயர் இடம் பெற்றுள்ளது.
போலீஸ் சேவையில் எந்தவித குறைபாடு மற்றும் புகார்கள் இன்றி செயல்படுதல், கோர்ட்டு மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தல், சட்டம் -ஒழுங்கு பராமரித்தல் போன்ற பணிகளுக்காக ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது பெற இருக்கும் இன்ஸ்பெக்டர் சுதேசன், 1997-ம் ஆண்டு நேரடியாக சப் இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்று பணியில் சேர்ந்தார். பின்னர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார்.
சுதேசன் கடந்த 2௦14 இல் தமிழக அரசின் அண்ணா பதக்கம் பெற்றார். கடந்த 2௦2௦ இல் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது ஆவணங்கள் பராமரிப்பு மற்றும் சிறந்த பணிக்காக மாநிலத்திலேயே சிறந்த போலீஸ் நிலையம் என்ற பெருமையை கிழக்கு போலீஸ் நிலையம் பெற்றது.
கோவில்பட்டி மக்களின் அன்பை பெற்றிருக்கும் சுதேசன், குமரி மாவட்டத்தில் 12 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார், மாவட்ட எஸ்.பி.இன்ஸ்பெக்டராகவும், தக்கலை இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றி இருக்கும் சுதேசன், 4 மாதங்களுக்கு முன்பு பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
ஜனாதிபதி விருது பெற இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் இது பற்றி கூறுகையில், “உயர் அதிகாரிகள் இட்ட பணிகளை நேர்மையாகவும், திறமையாகவும் செய்ததால் இந்த விருது கிடைத்து இருக்கிறது. இன்னும் உற்சாகத்துடன் பணியாற்ற இந்த விருது புதிய உத்வேகத்தை கொடுக்கும்” என்று தெரிவித்தார்.
