தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்திற்குள் பயணிகளை இறக்கிவிட உத்தரவு
தூத்துக்குடியிலிருந்து சென்னை, மதுரை, கோவை, ராமநாதபுரம், கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்தில் இருந்துதான் புறப்படுகின்றன,
அதேபோல், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட தெற்கிலிருந்து வரும் பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்குள் வந்துதான் மதுரை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்கின்றன.
ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலிருந்து வந்து திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் பஸ்கள், புதிய பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் வெளியில் உள்ள பாலம் அருகில் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு சென்று விடுகின்றன. இதனால் பயணிகள்., அந்த சாலையை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்குள் சென்றுதான் ஆட்களை இறக்கி செல்ல வேண்டும். அதுகுறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அதை மீறும் பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
அதன்பேரில், போக்குவரத்து காவல் துறை சார்பில் பாலத்தின் முகப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த உத்தரவை பஸ் டிரைவர்கள் சரிவர மதிப்பதில்லை என்ற புகார் தற்போது எழுந்துள்ளது.