கோவில்பட்டி அருகே கும்பாபிஷேக விழாவுக்கு ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினர்; கிராம மக்கள் ஆச்சரியம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு தீத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் குடியேறினார்.
இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மூத்த மகன் நடராஜன் ஆகியோர் இரும்பு கடை நடத்தி வருகின்றனர். மற்றொரு மகன் ராஜதுரை ஜவுளி கடை வைத்துள்ளார்.
நடராஜனுக்கு சிறுவயது முதலே ஹெலிகாப்டர், விமானம் ஆகியவற்றின் மீது ஈடுபாடு அதிகம். அவற்றில் பயணம் செய்ய வேண்டும் என்பது அவரது நீண்ட கால ஆசை. அதேபோல நடராஜனின் மகன் மோகித்துக்கும் தந்தையை போல ஆசை இருந்துள்ளது.
இந்த நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள அவர்களது தீத்தாம்பட்டி கிராமத்தில் பத்திரகாளி அம்மன், கன்னி விநாயகர், சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த திருவிழாவை காண பாலசுப்பிரமணியன் தனது மகன் மற்றும் பேரனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கும்பாபிஷேக விழாவிற்கு செல்ல தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்தார். அதன்படி நடராஜன், அவரது மனைவி சுந்தரவல்லி, மகன், பேரன், மற்றும் உறவினர் அசோக் ஆகிய 5 பேரும் தங்கள் ஊரிலிருந்து பெங்களூருக்கு காரில் சென்றனர்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திப்பம்பட்டி வந்தனர். சொந்த ஊருக்கு ஹெலிகாப்டரில் வந்தவர்கள் இரண்டு முறை அந்த ஊரை சுற்றி வட்டமடித்தனர். இதை கண்ட கிராம மக்கள் ஆச்சரியத்துடனும், ஆர்வத்துடனும் பார்த்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் வெளியே வந்தனர். அங்கு கூடிய மக்கள் சிலர் ஹெலிகாப்டர் முன்பு நின்றபடி செல்பி எடுத்துக் கொண்டனர். அதில் சிலர் ஹெலிகாப்டரில் ஏறி ஒரு ரவுண்ட் சென்று வந்தனர். பின்னர் அதே ஹெலிகாப்டரில் பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் ஊருக்கு திரும்பி சென்றனர்.
