ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி ஸ்டேடியம்- அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி தருவை மைதானத்தில் கோடை கால விளையாட்டு பயிற்சிகள் நடைபெற்று வந்தது. நிறைவு நாளான இன்று (11.6.2022) அதற்கான விழா நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-
’தூத்துக்குடி மாவட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்கால சந்ததியினரை உயர்ந்தநிலைக்கு கொண்டு செல்வதற்காக அவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இன்று நிறைவு பெறும் பயிற்சிக்கு 238 பேர் வந்திருக்கிறார்கள். இதுபோன்ற பயிற்சிகள் விளையாட்டு மாணவர்களுக்கு நல்ல ஊக்கத்தை தரும். ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய உணர்வு உருவாகும். தளராத முயற்சி, பயிற்சி மற்றும் உழைப்பினால் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை மனதில் பதிவு செய்யும்.
பீச் வாலிபால், பீச் புட்பால், பீச் கபாடி போட்டிகள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கோவில்பட்டியில் நடைபெற்ற ஆக்கி போட்டியில் எல்லா மாநிலத்திலும் இருந்து வந்தார்கள். அவர்கள் சோர்வு அடையவில்லை. எனவே நம்முடைய மாணவர்களும் முட்டை, பால், தானிய வகைகள் உள்ளிட்ட சத்தான உணவுகள் சாப்பிட்டால்தான் நன்றாக விளையாட முடியும்.
இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.
