சென்னை சட்டப் பல்கலைக்கழக கோவில்பட்டி மாணவிக்கு கல்வி கட்டணத்துடன் ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை சட்ட பல்கலைக்கழகத்தில் படித்த கோவில்பட்டி மாணவிக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈதடியுடன் கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சார்ந்த பூஜா என்பவர் சென்னையில் ஒரு சட்டப் பல்கலைக் கழகத்தில் முதலாண்டு பயில சேர்ந்துள்ளார். இதற்கிடையில் அவருக்கு அரசின் ஸ்கூல் ஆப் எக்ஸ்செலன்ஸ் சட்டக் கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைத்ததால் அங்கு சேர்ந்துள்ளார்.
70 நாட்கள் மட்டுமே சென்னையிலுள்ள சட்டப் பல்கலைக் கழகத்தில் படித்ததால் தான் ஏற்கனவே செலுத்திய கல்வி கட்டணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால் பல்கலைக் கழக நிர்வாகம் மறுத்து விட்டது. இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்து வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் செலுத்தப்பட்ட கல்விக் கட்டணத் தொகை ரூ. 2,65,000 சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ 25,000;, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.3 லட்சத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் அத் தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
