குற்றாலம் அருவிகளில் நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் குளிக்க ஏற்பாடு; போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும். இந்த ஆண்டு சீசன் முன்கூட்டியே தொடங்கி விட்டது.
குற்றாலம் பகுதிகளில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இந்த அருவிகளில் குளிப்பதால் உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் இதனால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்து இரவும் பகலுமாக குளித்து வருகின்றனர்.

இந்நிலையில் குற்றாலத்தில் பெய்து வரும் தொடர் சாரல் மழையினால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று காலையில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தற்காலிகமாக தடை விதித்தனர்.
ஆனாலும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சீராக விழுவதால் சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவியில் தொடர்ந்து குளித்து வருகின்றனர். மெயின் அருவியில் தண்ணீரின் வரத்து சற்று குறைந்த உடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் மதியம் மெயின் அருவியில் வெள்ளம் குறைந்ததால் குளிக்க அனுமதித்தனர்.

குற்றாலம் சீசன் நேரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.அரவிந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும், கூட்ட நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் ஆனந்தமாக குளிக்க செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது, தென்காசி ஏ டி எஸ் பி,
டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்கள் சப்இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

