ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 24-ம் தேதி திருச்சியில் மாநாடு; பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பொதுக்குழுவை தலைமை நியமிக்கிறது. தலைமையை பொதுக்குழு தேர்வு செய்கிறது. எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு தொண்டர்களுக்கு சம்பந்தமில்லாத போலியானது. ஒ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் கால்பந்தை போல் அலைக்கழிக்கப்படுகின்றன. அரசியல் மாயையில் அதிமுக சிக்கியுள்ளது. அ.தி.மு.க. பிளப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஈரோடு கிழக்கில் தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றோம். அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபோதெல்லாம் மக்கள் தான் நல்ல தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
அ.தி.மு.க.வில் நிலவும் மாயை மக்கள் மன்றத்திற்கு சென்றால் தான் விலகும். சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வாக்குகள் பிரியக்கூடாது என்பதால் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் வேட்பாளர்களை வாபஸ் பெற்றனர்.
ஈரோடு இடைத்தேர்தலில் வடமாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.வினரும், அருந்ததியினரும் வாக்களிக்கவில்லை என்றால் அ.தி.மு.க. டெபாசிட் இழந்திருக்கும். எட்டு தோல்விகளை சந்தித்தது தான் சூப்பர் எம்.ஜி.ஆர்(எடப்பாடி பழனிசாமி ) செய்த சாதனை.
ஈரோடு இடைத்தேர்தல் முடிவுக்கு எங்களுக்கு ஊக்கத்தை தருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வருகிற 24-ம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெறும். மாநாட்டிற்கு பிறகு மாவட்டந்தோறும் ஒ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
