பிட் காயின் முதலீடு பெயரில் ரூ.12 லட்சம் மோசடி செய்தவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வாவல்தோத்தி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராமர் (வயது 48) என்பவரின் முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து ராமர் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொண்டு பின்னர் அவர்கள் கொடுத்த Protonforex.com என்ற இணையத்தில் ரூபாய் 12,10,740/- முதலீடு செய்துள்ளார்.
இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகர் உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ராமரை மோசடி செய்தது கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிராஜ் மகன் கருணாகரன் (32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படையினர் நேற்று கோயம்புத்தூர் சென்று கருணாகரன் வீட்டு முன்பு வைத்து அவரை கைது செய்தனர்.
மேலும் அவரிமிருந்து ரூ.5 லட்சம், ஒரு கார், லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IV ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
மேலும் அவரது வங்கி கணக்கிலிருந்த ரூ.9லட்சத்து 98ஆயிரத்து 865 பணத்தையும் முடக்கம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்து எதிரியை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்
