வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் கொள்ளை
தூத்துக்குடி அண்ணாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 58). இவர்கள் இருவரும் நேற்று மாலை அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றனர்.
சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.12 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க மர்மநபர் ஒருவர் வீட்டில் நுழைந்து நகை, பணத்தை கொள்ளையடித்து கொண்டு பின்பக்க சுவரில் ஏறி குதித்து தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. அந்த மர்மநபரை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.